tamilnadu

img

ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு” வாட்ஸ்அப் குழு தொடக்கம்

ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு” வாட்ஸ்அப் குழு தொடக்கம்

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தை தத்தெடுப்பு விதிமுறை 2017, பெண் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் ரயில்வே நிலைய மாஸ்டர், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ஸ்ரீதரன், இருப்புப்பாதை காவல் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன், மோகன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, ஓடும் ரயிலில் பெண் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு” என்ற வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  ஓடும் ரயிலில் அல்லது ரயில் நிலையத்தில் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக இந்த வாட்ஸ் அப் குழுவில் பதிவு செய்தால் சம்பவ இடத்திற்கு அந்தந்த பகுதி ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பர். இந்த வாட்ஸ் அப் குழுவில் ரயிலில் பயணிக்கும் பெண்கள் உறுப்பினர்களாக சேர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்த வாட்ஸ் அப் குழுவில் பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு, முப்பெரும் விழா

திருவாரூர் மாவட்டம் பள்ளி கல்வித்துறை சார்பாக, நூற்றாண்டு கடந்த பள்ளிகளை கொண்டாடும் விதமாக விழா நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நன்னிலம் ஒன்றியம், பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா, பள்ளியின் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.  பூந்தோட்டத்தில் இருந்து நூற்றாண்டு சுடர் பயணம் கொண்டுவரப்பட்ட சுடரை பெறும் நிகழ்வுடன் முப்பெரும் விழா தொடங்கியது. விழாவில் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சௌந்தரராஜன் வரவேற்புரையாற்றினார்.  நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக மாவட்ட துணைத் தலைவர் வே.மனோகரன், வட்டாரக் கல்வி அலுவலர் என்.மணி, ஆசிரியர் பயிற்றுனர் பா. சுமதி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். விழா குழு தலைவர் மு.கல்யாண சுந்தரம், செயலாளர் சி.துரைராஜு, பொருளாளள் இரா. இராஜகோபால் மற்றும் பூந்தோட்டம் ஜமாத் தலைவர் ஜெ.அப்துல்அஜீஸ், முன்னாள் பள்ளி மாணவர் சீனி.மணி இப்ராஹிம் சேட் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் லோ.சுமதி நன்றி கூறினார். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து, நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.